Sunday, February 9

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்..!

(தந்தி டிவியில் சனி,ஞாயிறுதோறும் காலை 7.10 மணிக்கு (சுமார்) ஒளிபரப்பாகும் திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் தொடரிலிருந்து, ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பான தகவல்கள் இங்கே மீள்பதிவு செய்யப்படுகிறது. இன்று நாம் பார்க்கவிருப்பது வைகுண்ட ஏகாதசி (ஜனவரி11)அன்று ஒளிபரப்பான பகுதியிலிருந்து  ) 

திருமலை திருப்பதி கருவறை மூலவர் சிலை..!

வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.

அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..

கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..

ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..”  இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,

கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..

சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..

இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சிலநொடிகள்கூட நம்மள  சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..

இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..

அம்மா மஹாலட்சுமி, ஐயா கவிஞர் பெருமாள் ராசு

(சமீபத்துல கூட ஐயா கவிஞர் பெருமாள் ராசுவும் அம்மா மஹாலட்சுமியும் திருப்பதி தரிசனத்துக்கு போயிருந்தப்ப, பொறுமையா அவங்கள எந்த இடையூறும் செய்யாம சாமிய தரிசனம் செய்ய அனுமதிச்சிருக்காங்க..

அதுமட்டுமில்லீங்க..ஐயா கவிஞர் பெருமாள் ராசு சாமிய பாத்துட்டு திரும்பும்போது,

அவர கூப்பிட்டு, “நாராயணா…, இத வாங்கிட்டுப்போங்க நாராயணா….”ன்னு  சொல்லி,

சாமி பாதத்துல இருந்த துளசிதளங்களையும், முந்திரி, பாதாம் போன்ற பிரசாதங்களை கைநிறைய அள்ளி கொடுத்து அனுப்பியிருக்காங்க.)

இனி..,

கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்

“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.

கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,

அரூப தேவதைகள் சுவாமியை தரிசிக்கும் திருப்பதி கர்ப்பாலயம்

சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,

குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,

பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,

அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,

அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,

அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,

அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.

இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”

ஆச்சரியமா இருக்குல்ல..அடுத்ததா, ஜனவரி 11 அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி..இதுபத்தியும் சில புதிய தகவல்கள சொல்லியிருக்காரு..டாக்டர் ரமண தீட்சிதர்

“..திருமலை திருப்பதியில் இன்று (ஜனவரி 11) வைகுண்ட ஏகாதசியை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள்,திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.

அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர்  கொண்டுவரப்பட்டு  பக்தர்கள் வடக்குதுவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி,  துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.

அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் ,

வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

பரமபதநாதர்(வண்ண கட்டமிடப்பட்டிருப்பது) அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரா


ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.

இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று மற்றொரு விசேஷம்,

ரதரங்கடோலோத்வம்

ரதரங்கடோலோத்சவம். புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து  மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்.."

இனி ஒவ்வொரு முறை திருப்பதி போகும்போதும் சாமிகிட்ட என்ன வேண்டறதுன்னெல்லாம் யோசிக்க வேண்டியதில்லீங்க...உந்தன் திருக்கமல பாதங்களே சரணம்னு மட்டும் நாம நமஸ்காரம் செஞ்சிட்டா போதும்..மீதி எல்லாம் பெருமாள் பாத்துக்குவாருன்னு முடிவு செஞ்சிருக்கேன்.

அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு சிவப்பு அம்புக்குறியால மார்க் செய்யப்பட்டிருக்கும்.

இது எதுக்காகன்னு ஒருமுறை கவிஞர் ஐயா பெருமாள் ராசு அவங்ககிட்ட கேட்டிருந்தேன்.

"..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."

அப்படின்னு ஐயா கவிஞர் பெருமாள் ராசு அவங்க சொல்லியிருந்தாங்க..

இது உங்க எல்லாருக்கும் பயன்படட்டும்னுதான் இங்க எழுதியிருக்கேன். அதுமட்டுமில்லாம..இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,

அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்குன்னு ரமண தீட்சிதரே சொல்லியிருக்காரு.

சாமானிய ஜனங்களுக்கும் சின்ன,சின்ன இந்த நுட்பமான ஆன்மீக தகவல்கள் போய் சேரணும், அதன்மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் அப்படிங்கறதுதான்  பெருமாளோட விருப்பம்..இதையெல்லாம் உங்களோட பகிர்ந்துகொள்ள கிடைச்ச இந்த வாய்ப்பு.. எனக்கு ரொம்பவே பெருமிதம்..!

இதோ..இந்தப்பதிவுல நாம விவரிச்சிருக்குற வீடியோ பதிவு

திருமலை திருப்பதி - பிரபஞ்ச ரகசியங்கள் - பாகம் -04 (நன்றி ; தந்தி டிவி )

ஓம் நமோ வேங்கடேசாய..!

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாகத் தான் இருக்கிறது...! திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் அவர்களின் விளக்கங்களுக்கு நன்றி...

பிரபஞ்சவெளியில் said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்..

பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

Anonymous said...

திருமலையில் இருக்கும் தெய்வம் விஷ்ணுவா இல்லை முருகனா ?

'அதிவோ அல்அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்று அன்னமையா பாடலுக்கு ஏற்ப திருமலை விஷ்ணு கோவில் தான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். திருமலை தெய்வம் முருகனாக இருக்கலாம் என்று கூறுவோர் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் இதோ:
1. ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்ற கூற்று போலவே தமிழில் இன்னொன்றும் இருக்கிறது. ‘மலை இருக்கும் இடமெல்லாம் மால் இருக்கும் இடம்’. குன்று என்பது சிறியது. நடந்தே கடக்கக்கூடியது. குன்றின் மேல் குகை இருக்கும். இது பழந்தமிழர் வாழ்ந்த இடம். ஆனால் மலை என்பது பெரியது. திருமலை குன்றல்ல. மலைத்தொடர்.
2. திருமலை கோவிலில் வைணவ சிற்பங்கள் இல்லை: வைணவ திரு தலங்கள் இரண்டு ஆகம விதிப்படி அமைக்கபெறுகின்றன. அவை வைகாநஸம் மற்றும் பான்சராத்ரம். திருமலை வைகாநஸ விதிப்படி கட்டப்பட்டது. இந்த விதிப்படி பிரதான தெய்வம் தவிர மற்ற தெய்வங்கள் பெரிதாக பூஜிக்கப்படுவதில்லை
3. பாலாஜி என்ற பெயர் 'பாலன்' என்ற பெயரில் இருந்து வந்தது. பாலன், குமரன் எல்லாம் முருகனை குறிக்கும்: பாலாஜி என்பதற்கு பெயர் காரணம் வேறு. அதில் இருக்கும் ‘BALA’ தமிழ் அல்ல, வடமொழி. வட இந்தியாவில் சிவனை போலேநாத்(கூப்பிட்டாலே போதும் அருள் புரிபவர்) என்றும் விஷ்ணுவை பலநாத்(சக்தியின் முழு வடிவமானவர்) என்றும் அழைப்பார்கள். BalaNAATH & BalaJI, மருவி பாலாஜி ஆகிவிட்டது.
4. மற்ற வைணவ கோவில்களில் இருப்பது போல் நான்கு கைகள் இல்லை: எழுமலையான், விஷ்ணுவின் அவதாரம் இல்லை(not an incarnation). ராமன் (திரேத்தா யுகம்), கண்ணன்(துவாபர யுகம்) போன்று மனித உருவில் வந்த கலியுக தெய்வம்(manifestation). ஆதலால் மனித உருவத்திலேயே காட்சி தருகிறான்.
5. மூலவர் சிலையில் ருத்திராக்ஷமும் கையில் வேலும் உள்ளது. அதை மறைக்கவே நாமம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன: நிச்சயம் இல்லை. இப்பொழுது கூட்டம் மிகுதியால், திருமலைக்கு வரும் அனைவரும் இறைவனை தரிசனம் செய்ய வேண்டி அபிஷேகம் விரைவாக நடக்கிறது. 40 வருடங்களுக்கு முன் அபிஷேகம் நடந்த போது இடையில் ஒரு வேட்டி மட்டும் கட்டிய நிலையில் நான் தரிசித்து இருக்கிறேன். அப்படி எதும் இல்லை என்று என்னால் அடித்து கூறமுடியும்.
6. வைணவ கோவில்களில் மொட்டை போடும் பழக்கம் இல்லை, இது ஜைன / புத்த மத பழக்கம்: முடி காணிக்கை என்பது திருமலைக்கு மட்டுமே உரித்தான ஒன்று. பிற்பாடு தான் மற்ற கோவில்களிலும் உண்டானது. அரசன் ஒருவன் தனது இருமுடியை மழித்து காணிக்கை ஆக்கி இறைவனிடம் சரண் அடைந்த நாள் முதல் இது தொடர்வதாக கேள்வி.

Unknown said...

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

கூட்டம் கூட்டமாகப் போய்க் கும்பிடும் எந்த இடத்திலும் நீங்கள் கூறியதுபோன்ற மறதி ஏற்படுவது சகஜம்தான். அங்கே நகரு நகரு என்ற குரல் மட்டுமே காதில் விழும். அமைதியாக ஒரு கோவிலுக்குப் போய் கடவுள் முன் நின்றாலே நாம் மனதில் நினைத்துக் கொண்டு போவது நினைக்கு வருகிறது. மிகுந்த மன அமைதியும் கிடைக்கிறது.

கோபாலன்

Anonymous said...
This comment has been removed by the author.
Austin Creation said...

திருப்பதியில் கஜானா உள்ளதா?

Unknown said...

மூலவர்மூ எந்த திசை நோக்கி இருக்கிறது.?

Unknown said...

உண்மை தான் பல தடவை அவ்வாறு வேண்டுதல்களை சொல்ல மறந்ததுண்டு ஆனால் சென்ற முறை சென்றபோது ஒருமுகமாக பெருமாளை தரிசித்து வேண்டுதல்களை வைத்து விட்டேன்.