Saturday, July 20

காந்தியின் ராமனும், ராமாயண ராமனும்..!

சில நாட்களா கம்பராமாயணத்து மேல ஒரு ஈர்ப்பு.  கிடைக்கற நேரங்கள்ல இணையத்துல படிக்கத் தொடங்கினேன்.கொஞ்சம் படிச்சதுலயே அதுல இருக்குற சிலிர்ப்பூட்டும் உணர்வுகள் என்னை  ஆக்ரமிக்கத் தொடங்குச்சு.

குறிப்பா, அனுமன் முதன் முதலா ராமனை பார்த்த இடம்.

ராமா,ராமா
சுக்ரீவனைத் தேடி ராமனும், லட்சுமணனும் காட்டுக்குள்ள வந்துட்டு இருக்காங்க.

வில்லோட வர்ற இவங்க இரண்டுபேரையும் தூரத்துல இருந்தே பார்த்துட்டு தன்னோட அண்ணன் வாலிதான் தன்னை கொல்ல இவங்கள அனுப்பியிருக்கிறதா  நினைச்சு பயந்துபோன சுக்ரீவன் தலை தெறிக்க ஓடி ஒரு குகையில ஒளிஞ்சுக்கிட்டான்.

உடனே  தன்னோட அமைச்சரான அனுமனைப்பார்த்து
அவங்க யார்னு போய் தெரிஞ்சிட்டு வான்னு சொல்லி அனுப்புறான்.

அவங்க ரெண்டுபேரையும் தூரத்துல இருந்தே பார்த்து யோசிக்கிறான் அனுமன்.

ஆனா, அவங்களோ அங்க எங்கயாவது சீதை இருக்காளான்னு சுற்றும் முற்றும் பாத்துக்கிட்டே வர்றாங்க.

ராமனை சந்திக்க அவங்களுக்கு பக்கத்துல போறான் அனுமன்.

ராமனை நேருக்குநேரா பார்த்த நொடியில அனுமனோட மனசுக்குள்ள விவரிக்கமுடியாத உணர்ச்சிப்பெருக்கெடுக்குது.

ஒரு மனுஷன பார்த்த உடனே இப்படி மனசுக்குள்ள அன்பு சுரக்குமான்னு வியந்துபோறான் அனுமன்.

நாமகூட சிலரை பாக்கும்போதே அவங்களோட நட்பு வச்சிக்கணும்னு துடிப்போம்.

அதேமாதிரி சிலரை பாக்கும்போதே எரிச்சலடைவோம்.

அந்தமாதிரிதான் அனுமனுக்கும் ராமனை பார்த்ததுமே ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.

இந்த இடத்திலதான் எனக்கும் அப்படி ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது.நான் அறியாமலேயே ராமாயணம் என்னை ஆட்கொண்ட இடமிது.

அடுத்ததா, ராம, ராம எனும் ராமநாமத்தை வானரங்கள் சொல்லச் சொல்ல சம்பாதிக்கு இறக்கை முளைக்கும் இடத்தில் நம் உடம்பிலும் ஒரு சன்னதம் ஏற்படுவதை மறுக்க முடியாது.

எத்தனையோ தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தில் இருந்தும் இன்னும்கூட பலப்பல நுட்பமான தருணங்களை கண்டு பிடிச்சிகிட்டேதான் இருக்காங்க.

அந்தக்காவியமும் ரசிகமனதிற்கு ஏற்ப காலம்காலமாக விரிஞ்சுகிட்டேதான் இருக்கு.

இப்படி ஒரு எல்லையில்லா காவியத்தோட நாயகன் எவ்வளவு அற்புதமானவன்.

அவனது ராமநாமம் எத்தகைய சிறப்புகளையும் நிகழ்த்த வல்லது

அதனாலதான் காந்தி எந்தநேரமும் ராமநாமத்தை சொல்லிட்டு இருந்திருக்கிறார்னு நெனச்சுகிட்டே இணையத்துல தேடிப் பார்த்தப்போதான் எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

'ஹே ராம்'

ராமரைப்பற்றி காந்தியின் ஸ்டேட்மெண்ட் இதுதான்,

 "என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. ராமாயணக்கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்"

இப்படி காந்தி சொல்லியிருப்பார்னு நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவேயில்ல. எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாயிருந்தது.

அப்படின்னா, காந்தி வணங்கின,அவரோட உயிருக்கு உயிரா மதிச்ச ராமன் யாரு?

இப்படி ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. இந்த  சந்தேகத்த யாரால தீர்க்கமுடியும்ன்னு யோசிச்ச உடனே எனக்கு எழுத்தாளர் ஜெயமோகன்தான் நினைவுக்கு வந்தாரு.

அவருக்கு எழுதினேன். உடனே, பதில் சொல்லியிருக்காரு.

(அந்தப்பதிவு காந்திராமன்)

அவரோட பதில் எனக்கு ஒரு புதிய திறப்பா அமைஞ்சிருக்கு.

இதுல இன்னும் நான் நிறையதூரம் பயணப்பட வேண்டியிருக்கு. 

இணையத்துல ராமாயண ராமனும், காந்தியின் ராமனும் என்பது குறித்து ஒரு பெரும் விவாதம் தேவையாயிருக்கு.

விபரம் அறிந்தவர்கள் இதை முன்னெடுத்து செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

ராம காதை குறித்து எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி அவர்களும் விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். (அந்தப்பதிவு Kamban’s golden touch)

தொல்பழங்குடி மக்களோட வாழ்வுல பலப்பல ஆண்டுகளாக வாய்வழிச்செய்தியா ராமரைப்பத்தின  பலவிதமான நிகழ்வுகள் பேசப்பட்டு வந்திருக்கு,

அந்தசம்பவங்களும், ராமனின் வாழ்க்கையும்  கி.மு 5ம் நூற்றாண்டுல் புத்த ஜாதகா கதைகள்(Buddha Jataka tales) என முதன்முதலா எழுத்துல உருவானது.

Jataka tales of Buddha 
அதில் புத்தர் ஞானம் அடைவதற்கு முந்தைய கவுதமனே  ராமனாக உருவகப்படுத்தப்படுகிறார்.

தனது வளர்ப்புத்தாயின் கோபத்தால தனது நாட்டை விட்டுட்டு இமயத்திற்கு ராமன் செல்வதாக இங்கு சொல்லப்படுகிறது.

நாட்டின் பலபகுதிகளிலும் பேசப்பட்ட ராமரைப்பற்றின பல சம்பவங்களை தொகுத்த வால்மீகி இதனை ராமாயணமாக உருவாக்கினார்.

வடக்கில் நேபாளத்தில் தொடங்கி தெற்கில் ஸ்ரீலங்காவரை ராமாயண களம் அமைஞ்சிருந்தது.

இந்தியாவின் கலாச்சார முகத்தை ராமாயணத்துல நிர்தட்சணமாக தரிசிக்க முடியும். அதனாலேயே வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் ராமாயணத்தை தங்கள் வாழ்க்கையோட  பொருத்திப்பார்த்து ரசிச்சாங்க.

ராமாயணத்தின் ஆன்மாவுல ஒளிர்ந்த உண்மைதான் அத காலம் கடந்தும் ஒரு மிகப்பெரும் காவியமா வளர்த்தெடுத்திருக்கு.

ஆன்மா இல்லாத எந்த எழுத்தும் காலம் கடந்து நிற்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.  

0 comments: